Monday, August 18, 2014

சிலுவையில் அறையப்பட்டவர் ஈஸா நபியே ஆள் மாறாட்டம் இல்லை


திருக்குர்ஆன் விளக்க அட்டவணை எண் 265- இல் ஒருவர் இன்னொருவரின் என்னும் தலைப்பில் பி.ஜே இவ்வாறு எழுதுகிறார்:

திருக்குர்ஆன் பல வசனங்களில் ஒருவர் மற்றவரின் பாவத்தை சுமக்க முடியாது என்று கூறுகிறது. இது இஸ்லாத்தின் மிகப் பெரிய அடிப்படைக் கொள்கை. குறிப்பாக இந்த அடிப்படையில்தான் கிறிஸ்தவ மார்க்கத்தில் இருந்து முற்றாக இஸ்லாம் மாறுபடுகிறது. எல்லோரும் பாவிகளாகப் பிறந்து அந்தப் பாவத்தை ஏசு சுமந்து கொண்டார் எனக் கூறப்படும் சித்தாந்தத்தை இஸ்லாம் மறுக்கிறது.

ஒருவர் பாவம் செய்தால் அந்தப் பாவம் அவரைத்தான் சாரும். ஆதாம் பாவம் செய்தால் ஆதமுடைய பிள்ளைகள் யாரும் அந்தப் பாவத்தில் பங்காளிகள் இல்லை. எனவே பிறக்கும் போதே யாரும் பாவியாகப் பிறக்க மாட்டார்கள்.
அப்படியே பாவம் செய்தாலும் இன்னொருவரது பாவத்தைச் சுமக்க முடியுமா? அனைவரது பாவங்களையும் சுமப்பதற்காக ஏசு பலி கொசுக்கப்படுவாரா? என்றால் அதையும் இஸ்லாம் மறுக்கிறது.

மற்றவர்கள் செய்த பாவங்களுக்காக அந்தப் பாவத்தில் சம்பந்தமில்லாத ஒருவரைப் பலி கொடுப்பது என்பது இஸ்லாமிய அடிப்படைக்கு எதிரானது.

நம் விளக்கம்:

1. ஹஸ்ரத் ஈஸா(அலை) அவர்களைப் பிடிப்பதற்காகச் சென்ற போது, அல்லாஹ் ஆள்மாறாட்டம் செய்து ஈஸா நபியைக் காப்பாற்றி தன்னளவில் உயர்த்திக் கொண்டான். கைது செய்ய வந்தவர்களுள் ஒருவன் ஆள்மாராட்டத்தினால் ஈஸா நபி எனப்பிடிக்கப்பட்டு சிலுவையில் அறைந்து கொல்லப்பட்டான் என்று கற்பனைக் கதையை பி.ஜே நம்புகிறார். (ஆதாரம்: 4:157 பி.ஜே மொழியாக்கம்) மேலே அவர் கூறிய படி ஈஸா நபிக்குப் பதிலாக சிலுவையில் அறையப்பட்டவன், அந்தச் சம்பவத்தில் எக்குற்றமும் செய்யாதவன். இவ்வாறு அக்குற்றத்தில் சம்பந்தமில்லாத ஒருவனைப் பலி கொடுப்பது என்பது இஸ்லாமிய அடிப்படைக்கு எதிரானது ஆகாத?

2. திருக்குர்ஆன் 18:80 வது வசனத்தில், “ அவர் கூறினார்; நாங்கள் எவரிடத்தில் எங்கள் பொருள்களைக் கண்டு பிடித்தோமோ அவரைத் தவிர வேறொருவரை நாங்கள் பிடிப்பதிலிருந்து இறைவனிடம் அடைக்கலம் தேடுகிறோம். நாங்கள் அவ்வாறு செய்தால் அநீதி இழைத்தவர்களைச் சேர்ந்தவர்கள் ஆவோம். என்று வருகிறது. அதாவது குற்றவாளியை விட்டுவிட்டு அதில் சம்பந்தமில்லாத ஒருவரைப் பிடிப்பதைப் அநீதி இழைத்தல் என்றும் அவ்வாறு செய்யாதிருக்க அல்லாஹ்விடம் அடைக்கலம் தேடுவதாகவும் இந்த வசனம் கூறுகிறது”. ஆள் மாறாட்டத்தால் வேறு ஒருவர் சிலுவையில் அறையப்பட்டார் என்றால் அது அநீதி ஆகாதா?

3. அல்லாஹ் ஆள்மாறாட்டம் செய்துதான் யூதர்களிடமிருந்து தன் நபியை காப்பாற்ற வேண்டுமா?

4. ஆள்மாறாட்டம் செய்து அப்பாவி ஒருவனைச் சிலுவையில் அறைந்து கொள்ளாமல் தன் நபியைக் காப்பாற்ற அல்லாஹ்வால் முடியாதா?

5. ஷுப்பிஹலஹும் எனும் சொற்றொடருக்கு ஆள் மாறாட்டம்தான் பொருள் என்பதை பி.ஜே திருக்குரானிலிருந்தும் நபிமொழிகளிலிருந்தும் அகராதியிலிருந்தும் தக்க சான்றுகள் தந்து நிரூபிக்க முடியுமா? எனவே இதை பி.ஜே யின் பொருள் மாறாட்டம் என்று கூறலாமா?

6. தமிழிலும் ஆங்கிலத்திலும் வெளிவந்துள்ள ஏறக்குறைய தர்ஜுமாக்களில் ஆள்மாறாட்டம் எனும் பொருளைக் காண முடியவில்லையே என்?

7. ஆள்மாறாட்டம் போன்ற இழி செயல்களை அல்லாஹ் செய்வானா?

8. ஒரு தூய நபியின் தோற்றத்தைச் இன்னொரு மனிதனுக்கு அல்லாஹ் கொடுப்பானா?

9. ஆள் மாறாட்டத்தில், சிலுவையில் அறையப்பட்டவனின் மனைவி, மக்கள், நண்பர்கள், உற்றார் உறவினர்கள் யாரும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லையா? பி.ஜே இப்படித்தான் இருப்பார் போலும்.

10. ஈஸா நபியின் உருவம் கொடுக்கப்பட்டவர், தோற்றத்தில் மட்டும்தான் மாறினாரா? உள்ளத்தாலும் மாறினாரா?

ஆதாம் பாவம் செய்தால், ஆதமுடைய பிள்ளைகள் யாவும் அந்தப் பாவத்தில் பங்காளிகள் இல்லை என்று கூறுகிறார். (திருக்குர்ஆன் விளக்க அட்டவணை எண் 265) இதில் பரம்பரை பாவம் இல்லை என்கிறார்.

திருக்குர்ஆன் விளக்க அட்டவணை எண் 15-இல் அனைவரும் வெளியேறுங்கள் எனும் தலைப்பில் உலகம் அழியும் வரை தோன்றும் அனைவரையும் அவ்விருவரும் தமக்குள் சுமந்திருந்தார்கள். அவர்களிலிருந்து தோன்ற இருப்பவர்களையும் கருத்தில் கொண்டு இவ்வாறு கூரபட்டுள்ளது என்று பி.ஜே எழுதியுள்ளார்.

ஆதம் நபி செய்த தவறு அவரது சந்ததியில் அனைவரையும் பங்காளியாக்கிவிட்டது. இவ்வாறு கடைசி மனிதன் வரை பரம்பரைப் பாவம் பாதித்து விட்டது என்கிறார்.

இந்த சுய முரண்பாடு ஏன்? இவ்விரண்டில் எது சரி?


முன்னது சரி என்றால், பின்னது தவறாகும். எந்த அளவுக்கு என்றால், ஆதம் நபியும், அன்னை ஹவ்வாவும் செய்த பாவங்களுக்காகப் உலக மனித இனம் முழுமையும் சொர்க்கத்தை இழந்து, மண்ணில் பிறந்து வளர்ந்து, மண்ணைத் தின்று மண்ணோடு மண்ணாக மடிகிறோம். இவ்வாறு பரம்பரை பாவத்திற்கு ஆளாகி விட்டோம் என்று 100% கிறிஸ்தவக் கொள்கையை பி.ஜே நம்புகிறார் என்று பொருள். இவ்வாறு இஸ்லாத்தின் மிகப் பெரிய அடிப்படைக் கொள்கையை பி.ஜே தவிடுபொடியாக்கி விட்டார்.

1 comment:

  1. ஆதம் அலை அவர்கள் அங்கிருந்து வெளியேற்றப்பட்டது தண்டனை என்பதை விட அவர்களுக்கு அது மறுசோதனை எனலாம். இறைவனால் அவர்கள் மன்னிக்கப்பட்டார்கள்.நமக்கு இது தண்டனை ஆகாது. நமக்குரிய சோதனைக் களம் தான் இவ்வுலகம்.இறைவனால் வழங்கப்படும் தண்டனை மறுமையில் நரகத்தில்தான். இவ்வுலகில் பொருளாதாரத்தில் உயர்ந்த ஒருவர் ஏழ்மை நிலைக்கு வீழ்வது அவருக்குரிய சோதனையா அல்லது தண்டனையா? அது நச்சயமாக சோதனைதான். ஏழ்மையிலிருந்து பணக்கார நிலைக்கு உயர்வதும் சோதனைதான். அது போல்தாதான் ஆதம் அலை அவர்கள் உயரந்த சுககங்களை உடைய தோட்டத்திலிருந்து இப்பூமிக்கு மறுசோதனைக்கு அனுப்பட்டாரகள்.இங்கும் அவர்கள் இறைக்கட்டளைக்கு மாற்றமாக நடந்திருந்தால் மிகக் கீழ்நிலையான நரகத்தில் வீசப்பட்டிருப்பார்கள்.எதுவும் அறியாத நிலையில் அவர்கள் அந்த தோட்டத்தில் அனுமதிக்கப்பட்டு உயர்ந்த இடத்தில் இருந்தார், இவ்வுலகம் அவருக்கு ஏழ்மை நிலை வாழ்க்கை போன்றுதான், அது ஒரு சோதனைதான். நமக்கு இது ஒரு சோதனை உலகமே இங்கு சோதனையில் வெற்றிபெற்றால் உயர் நிலையான சுவர்க்கமும் தோல்வியுற்றால் கீழ்நிலையான நரகமும் கிடைக்கும். இது ஆதி பாவமாகாது.

    ReplyDelete